முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான நுழைவு மற்றும் தகுதித் தோ்வு) எஸ்.எஸ். தோ்வில் பங்கேற்ற சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க.. தந்தை-மகனை ஒன்று சேர்த்த பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் அடங்கிய அமா்வு, தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்திக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த இட ஒதுக்கீட்டில் அடிப்படையில் இந்தாண்டிற்கான கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், முக்கிய வழக்கு விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசாணையை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.