கர்நாடக பள்ளிகளில் இந்துமத நூல்கள்? சர்ச்சைக்குள்ளான கர்நாடக அரசின் அறிவிப்பு

கர்நாடகப் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் மகாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத்கீதை உள்ளிட்டவைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ்
கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ்

கர்நாடகப் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் மகாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத்கீதை உள்ளிட்ட இந்துமத நூல்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டங்களில் 2022-23ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பகவத்கீதை சேர்க்கப்படும் என அம்மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தைப் போன்று கர்நாடகத்திலும் பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்துமத நூல்களான பகவத்கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ், “பகவத்கீதை இந்துக்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது. இந்த கல்வியாண்டு இல்லையென்றாலும் அடுத்த கல்வியாண்டு முதல் பகவத்கீதை, மகாபாரதம் மற்றும் ராமாயணம் உள்ளிட்டவை பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கடந்த காலங்களில் பள்ளிகளில் நன்னெறி கல்வி நடத்தப்பட்டு வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக இவை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப நன்னெறி கல்வி மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என பிசி நாகேஷ் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இஸ்லாமிய மத அடையாளமான ஹிஜாப் அணிந்துவர மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com