ஆளும் பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ராம் மனோகர் லோகியாவின் 112ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “எளிய மக்களுக்கான எந்தவொரு நலத்திட்டத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. பெரும்பான்மை பெற்றதன் மூலம் பாஜக மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தை நாடே வேடிக்கை பார்த்து வருகிறது” என அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்தார்.
இதையும் படிக்க | நவீன ரக பிரமோஸ் வகை சோதனை வெற்றி
மாநில சட்டப்பேரவை மேலவை தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், “குண்டர்கள் மூலம் பாஜக ஜனநாயத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஜனநாயக வழிமுறைகளின் மீது பாஜக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இவற்றுக்கு எதிராக சமாஜ்வாதி தொடர்ந்து போராடும் எனத் தெரிவித்தார்.