
ஹபூர்: உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் அருகே, மார்ச் 18ஆம் தேதி முதல் காணாமல் போன நபர், தனது நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, அதனை புலந்தஷஹர் - ஹபூர் சுங்கச்சாவடி அருகே பள்ளம் தோண்டி புதைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், பெரிய பள்ளம் தோண்டி, உடல் பாகங்களை கைப்பற்றிய காவல்துறையினர், கொலையான நபருடன் குழந்தைப் பருவம் முதல் நண்பராக இருந்தவரையும், தொழில் கூட்டாளியையும் கைது செய்துளள்னர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட மொகம்மது இர்ஃபான், சுங்கச் சாவடி அருகே ஃபாஸ்ட்டேக் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பர் ரகீப், அந்த கடைக்கு அருகே உணவகம் நடத்தி வருகிறார். இவர் இர்ஃபானின் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இவர்கள் சேர்ந்து மொஹம்மது அகிப் என்பவரை கடையை கவனித்துக் கொள்ள அமர்த்தியுள்ளனர்.
இதனிடையே தொழில் கூட்டாளிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரகீப் தனது பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இல்லையென்றால் கடையை தானே எடுத்துக் கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் இர்ஃபானை கொல்ல ரகீப் திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
மார்ச் 18ஆம் தேதி இர்ஃபான் வீட்டுக்கு வராததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அவரது குடும்பத்தினர், இறுதியாக அவர் ரகீப் மற்றும் அகீப்புடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர், ஆரம்பத்தில் இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி ஏமாற்ற முயன்றனர். பிறகு காவல்துறையினர் தக்க முறையில் விசாரணை நடத்தியதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
விசாரணையில், இர்ஃபானைக் கொன்று அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி, பூமிக்கு மிக ஆழத்தில் புதைத்துவிட்டால் கண்டுபிடிக்க முடியாது என்பதால், ஜேசிபியை வைத்து, யாரும் வராத ஒரு இடத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உடல் பாகங்களைப் புதைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.