உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மீண்டும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது.
தற்போது தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஐந்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் மீண்டும் பிரதமரின் புகைப்படம் அச்சிடுவதைத் தொடங்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 5 மாநிலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் கரோனா சான்றிதழ்களில் பிரதமரின் படத்தைச் சேர்க்க கோ-வின் தளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.