பயங்கரவாதத்திற்கு எதிராக பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பு நகரில் நடைபெறும் 18வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான உச்சி மாநாடு ஆக்கபூர்வமாகவும் ஒத்திசைவாகவும் நிறைவு பெற்றது.
பயங்கரவாதம், தீவிரவாத வன்முறை, சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் கூட்டாக எதிர்க்க வேண்டும்.
வணிக ஒத்துழைப்பு, துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இலங்கை, இந்தியா, வங்கதேசம், பூடான், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.