நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் (ஏஎஃப்எஸ்பிஏ) வரம்புக்குள் வரும் பகுதிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அமித் ஷாவின் ட்விட்டர் பதிவு:
"குறிப்பிடத்தக்க நகர்வாக நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகளைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது."
இதையும் படிக்க | பிளஸ் 1 மாணவர்களுக்கு ஏப்.25 முதல் செய்முறைத் தேர்வு
எனினும், மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கமளிக்கையில், ஆயுதப் படை சிறப்புச் சட்டம் மூன்று மாநிலங்களிலிருந்து முழுமையாக விலக்கப்படவில்லை என்றார்.
நாகாலாந்தில் ராணுவப் படையால் கடந்த டிசம்பரில் தவறுதலாக 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப் படை சிறப்புச் சட்டத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.