வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகார வழக்கில் இன்று தீர்ப்பு

கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில்,
வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகார வழக்கில் இன்று தீர்ப்பு
Published on
Updated on
1 min read

கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 31) தீர்ப்பளிக்க உள்ளது.
 இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உள்ஒதுக்கீடுக்கு வகை செய்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி சட்டம் செல்லாது என உத்தரவிட்டது.
 இதை எதிர்த்து பாமக, தமிழக அரசு, பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 இந்த விவகாரத்தை டிசம்பர் 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதுதொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
 அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, மனுதாரர் சி.ஆர். ராஜன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், பாமக தரப்பில் மூத்த வழக்குரைஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
 எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ். நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
 இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
 இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் வியாழக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com