கோவாவில் வாகன நெரிசலுக்குத் தீர்வு காண அம்மாநில அரசு அதிரடி திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கோவாவில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
அதில், முக்கியமாக சாலைகளில் அதிகமாக இயங்கும் கார்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது.
சாலைகளில் பெரும்பாலும் கார்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. எனவே, புதிய கார்கள் பதிவு செய்வதைக் குறைக்க வேண்டும். இதனால், தேவையற்ற சிரமங்கள் சந்திக்க நேரிடுகிறது.
பலர் பார்க்கிங் வசதி இல்லாததால், அக்கம் பக்கம் வீடுகளில் நிறுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறவும் சிலர் தயங்கி வருகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் இந்த சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. இதை முழுவதும் மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும்.
மேலும் கோவா அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின் படி, மாநிலத்தில் 16 லட்சம் மக்கள் தொகைக்கு சுமார் 15.27 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 57 ஆயிரம் வாகனங்கள் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுகின்றன.
கோவாவில் உள்ள மொத்த வாகனங்களில் 70.81 சதவிகிதம் இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து கார்கள் மற்றும் ஜீப்புகள் டாக்சிகள் உள்பட 22.77 சதவிகிதம் ஆகும்.
இது இல்லாமல் சுற்றுலாப் பயணிகள், வாடகைக்கு இருசக்கர வாகனங்கள் எடுத்து ஓட்டுவதால், அதிக விபத்துக்களுக்கு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.