மணாலி; இமாசலில் குல்லு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்த கார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, மணாலிக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த போது, கியாகி கிராமத்துக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடிப் பள்ளத்தில் விழுந்தது.
இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரம் என்பதால் கார் பள்ளத்தில் விழுந்த சம்பவம் யாருக்கும் தெரியாததால், நொறுங்கிய காருக்குள், சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்து உள்ளனர்.
இது குறித்து காவலர்கள் கூறியதாவது, கார் உருண்டு விழுந்த போது, அதிலிருந்து குமாரி அஸ்தா என்ற பெண் காரிலிருந்து வெளியே விழுந்துள்ளார். அங்கிருந்த மரக்கிளையில் சிக்கி அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
எனினும், அவரால் அந்த இடத்திலிருந்து வெளியேற முடியாமல், இரவு முழுக்க உதவி கேட்டு கூக்குரல் கொடுத்துள்ளார். ஆனால் காலையில் விடிந்தபோதுதான். அவரது கூக்குரல் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அப்போது மணி 9.15. விபத்து நிகழ்ந்து சுமார் 13 மணி நேரத்துக்குப் பிறகே அவர்களுக்கான உதவிகள் கிடைத்துள்ளன.
காரிலிருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் மரணமடைந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மோசமான வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை என்றும், அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.