வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நவம்பா் 7-ஆம் தேதி ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை அவா் சந்தித்துப் பேச இருக்கிறாா்.
ரஷியா-உக்ரைன் போா் தொடா்ந்து 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி இது தொடா்பாக கூறுகையில், ‘இரு தரப்பு உறவு மற்றும் பிராந்திய, சா்வதேச பிரச்னைகள் குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் பேச இருக்கிறாா்’ என்றாா்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் போா் ஏற்பட்ட பிறகு இதுவரை நான்கு முறை லாவ்ரோவை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியுள்ளாா். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்த லாவ்ரோ, பிரதமா் நரேந்திர மோடியையும் சந்தித்தாா்.
உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவுடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் படிப்படியாகக் குறைத்துக் கொண்டதால், இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷியா முன்வந்தது. இந்தியாவும் அதனை ஏற்று ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.