காசி- தமிழ்ச் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்ட முத்துசாமி தீட்சிதர் புனித வீணை கோவையில் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"காசி- தமிழ் சங்கமம்' விழாவை பிரதமர் நரேந்திர மோடி வாராணசியில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா (எம்.பி.), "கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் காசியிலுள்ள கங்கையில் மூழ்கி எழுந்தபோது, சரஸ்வதி தேவி அவரது கையில் வீணையை அளித்தார். அந்த வீணை இன்னமும் இருக்கிறது. இப்படி தமிழகமும் காசியும் இசையால் பிணைக்கப்பட்டது' என குறிப்பிட்டார்.
இதன்பின்னர் இந்த வீணை எங்கே இருக்கிறது என்கிற கேள்வி எழுந்த நிலையில் இப்போது இந்த புனித வீணை கோவையில் இருப்பது தெரியவந்தது. முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழியிலுள்ள ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் அந்த வீணை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஊடகங்களில் வெளிவர இதில் மகிழ்ச்சியடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "காசியிலுள்ள தாய் கங்கை நதிக்கரையில் முத்துசாமி தீட்சிதருக்கு கிடைத்த புனிதமான வீணை அவரது வழித்தோன்றல்களிடம் இருப்பதை கண்டுபிடித்ததற்கு நன்றி' எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.