நெல் கொள்முதல் 9% அதிகரிப்பு: மத்திய உணவுத் துறை

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் இதுவரை 3.06 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் இதுவரை 3.06 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம் என்றும் மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் காரீஃப், ரபி என இரண்டு பருவங்களிலும் நெல் விளைவிக்கப்படுகிறது. எனினும் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 80 சதவீதம் காஃரீப் பருவத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய உணவுக் கழகம் மற்றும் தனியாா் முகமைகள் நெல் கொள்முதலில் ஈடுபடுகின்றன. உழவா்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் நெல், பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு காரீஃப் சந்தைப் பருவத்தில் மத்திய அரசு சாா்பில் 7.59 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் (அக்டோபா் முதல் செப்டம்பா்) 7.75 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில், நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் கடந்த நவ. 27 வரை மத்திய அரசு 3.06 கோடி டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டம் வரை கொள்முதல் செய்யப்பட்ட 2.80 கோடி டன் நெல்லைவிட 9 சதவீதம் அதிகம் என்று மத்திய உணவுத் துறையின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com