செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (இஸ்ரோ) அனுப்பப்பட்ட ஆய்வுக் கலமான ‘மங்கள்யான்’ பேட்டரி தீா்ந்து விசை இழந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டது.
ரூ. 450 கோடி செலவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மங்கள்யான்’ பிஎஸ்எல்வி-சி25 ஏவூா்தி மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2014 செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் ஆய்வுக் கலம் நிலைநிறுத்தப்பட்டது. 6 மாதங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட மங்கள்யான் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், ஆய்வுக்கலம் செயல்படத் தேவையான எரிபொருள் காலியாகிவிட்டதாகவும், மின்கலன் தன்திறனை இழந்துவிட்டதாகவும் இஸ்ரோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், மங்கள்யான் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பணியை மங்கள்யான் நிறைவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் குறிப்பிடத்தக்க அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு நில அமைவியல், பாறை அமைப்பு, வளிமண்டல செயல்முறைகள், மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்டவற்றை குறித்து அறிய 5 அறிவியல் சாதனங்களை மங்கள்யான் கொண்டிருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பியது.
செவ்வாய்கிரகத்துக்கு இரண்டாவது ஆய்வுக்கலம் அனுப்புவது குறித்து 2016 -ஆம் ஆண்டு இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்த போதிலும், மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான்-3 மற்றும் சூரியனின் மேற்பரப்பு ஆராய்ச்சிக்கான ஆதித்யா-எல் 1 உள்ளிட்ட திட்டங்களே இஸ்ரோவின் தற்போதயை விண்வெளி ஆராய்ச்சிப் பட்டியலில் முன்னுரிமை பெற்றுள்ளன.