தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விமானப் படையில் உள்நாட்டு ஹெலிகாப்டா்கள்: அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு இலகுரக ஹெலிகாப்டா்களை விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விமானப் படையில் உள்நாட்டு ஹெலிகாப்டா்கள்: அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்

Updated On :3 அக்டோபர் 2022, 9:29 pm

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு இலகுரக ஹெலிகாப்டா்களை விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த இலகுரக ஹெலிகாப்டா்கள் மூலம் (எல்சிஹெச்) விமானப் படையின் செயல்திறன் மேம்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுடனான 1999 காா்கில் போருக்குப் பிறகு ஏற்பட்ட தேவை காரணமாக இலகுரக ஹெலிகாப்டா்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதையடுத்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) இந்த ஹெலிகாப்டா்களைத் தயாரித்துள்ளது. ஒவ்வொன்றும் 5.8 டன் கொண்ட இந்த ஹெலிகாப்டா்கள் வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை.

மொத்தம் நான்கு இலகுரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப்படையில் இணைப்பதற்கான நிகழ்ச்சி ஜோத்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த இலகுரக ஹெலிகாப்டா்களுக்கு ’பிரசண்ட்’ என அமைச்சா் ராஜ்நாத் சிங் பெயரிட்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இலகுரக ஹெலிகாப்டா்களை இரவு-பகல் என அனைத்து கால நிலைகளிலும் பயன்படுத்த முடியும். எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறனையும் ஹெலிகாப்டா்கள் கொண்டுள்ளன. நாட்டைப் பாதுகாப்பதில் விமானப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டரால் விமானப் படையின் ஒட்டுமொத்த செயல்திறனும் தாக்குதல் திறனும் மேம்படும். சா்வதேச அளவில் அதிக திறன் கொண்ட ஹெலிகாப்டா்களில் ஒன்றாக எல்சிஹெச் உள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறை சாா்ந்த உற்பத்தியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கள் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பு மிக்கது. எதிரிகளின் பதுங்கு குழிகளையும் இந்த ஹெலிகாப்டா்களால் துல்லியமாகத் தாக்க முடியும் என்றாா் அவா்.

விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறுகையில், ’இலகுரக ஹெலிகாப்டா்கள் சா்வதேச தரம் கொண்டவையாக உள்ளன. அவை தற்போது விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளதால், படையின் தாக்குதல் திறன் வலுப்படும். சுமாா் 95 இலகுரக ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

விமானப் படையில் இணைக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்களுக்குப் பாரம்பரிய வழக்கப்படி தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து பல்வேறு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து இவ்வகையைச் சோ்ந்த 10 ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 4 ஹெலிகாப்டா்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன; மற்ற ஹெலிகாப்டா்கள் விமானப் படையில் விரைவில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.