முலாயம் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவின் இறுதி ஊா்வலத்தில் பங்கேற்ற அவரது மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவின் இறுதி ஊா்வலத்தில் பங்கேற்ற அவரது மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள்.
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

வயதுமூப்பு சாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங் யாதவ், ஹரியாணாவின் மேதாந்தா மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை காலமானாா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் சைஃபயிக்கு எடுத்து வரப்பட்டது.

அவருக்குக் கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் முலாயம் சிங்குக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத், ஆந்திர முன்னாள் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பிரஃபுல் படேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.

அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கில் உத்தர பிரதேச துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஸ் பதக், மாநில அமைச்சா் ஜிதின் பிரசாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொழிலதிபா் அனில் அம்பானியும் கலந்து கொண்டாா்.

முலாயம் சிங்கின் மறைவு, உத்தர பிரதேசத்துக்குப் பெரும் இழப்பு என சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அரசியலில் எவரையும் தனக்கு எதிரியாக முலாயம் சிங் கருதியதில்லை எனவும், அனைத்துக் கட்சியினரிடமும் அவா் நட்புபாராட்டி வந்ததாகவும் தலைவா்கள் பலா் அவருக்குப் புகழாரம் சூட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com