4-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில்: ஹிமாசலில் இன்று தொடக்கம்
‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேசத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக். 13) தொடக்கிவைக்கிறாா்.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனாவில் வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறாா். இந்த ரயில் தில்லி மற்றும் உனாவின் அம்ப் அன்தெளராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்டுள்ள குஜாரத், ஹிமாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவைத் தோ்தலை சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.