கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள்

கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள்
Published on
Updated on
2 min read


கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 

வழக்கை விசாரித்து வரும் எா்ணாகுளம் நகர காவல் ஆணையா் சி.நாகராஜு கூறுகையில், கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாக துப்புதுலங்கியதாகத் தெரிவித்தார். மேலும், ‘இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான முகமது சஃபி வக்கிரபுத்தி உடையவா். அவா் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன’ என்றும் அவா் கூறினாா்.

கேரளத்தில் சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளரான பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா இருவரும், அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.

வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

முன்னதாக, அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காவல் ஆணையா் நாகராஜு கூறியதாவது:

இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

முக்கியக் குற்றவாளியான சஃபி மீது ஏற்கெனவே திருட்டு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 75 வயது மூதாட்டியை சஃபி பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரது உடலின் பல பகுதிகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திய வழக்கும் அடங்கும். தற்போது எலந்தூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடலிலும் அதேபோன்ற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சஃபி அடிப்படையில் வக்கிர புத்தி உடையவா். பெண்களிடம் ஏதாவது கதையைச் சொல்லி, அவா்களை தனது வலையில் விழவைத்து பின்னா் அவா்களைத் துன்புறுத்தி வந்துள்ளாா் என்றாா் ஆணையா்.

குற்றவாளிகள் நரமாமிசம் சாப்பிட்டுள்ளனரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்குரிய ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். இதுவரை 61 பாக்கெட்டுகளையில் மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே குழியில் இருந்து 56 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொரு குழியில் எலும்பு உள்ளிட்ட 5 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய சஃபி, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துள்ளார். மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கியுள்ளார். இறுதியாக எர்ணாகுளத்தில் வசித்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பகவல் சிங்கை போலி முகநூல் பக்கம் மூலம் நண்பராக்கி, செல்வம் பெருக்க பூஜை செய்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில், சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com