உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் கார் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஹண்டியா அருகே சென்று கொண்டிருந்த கார் சாலை தடுப்பின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்து குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்: முக்கிய அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்!
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யுமாறும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் ரேகா தேவி(45), கிருஷ்ணா தேவி(70), சவிதா(36), ரேகா(32) மற்றும் ஒன்றை வயது குழந்தை ஓஜஸ் ஆகியோர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைக்கு முடி எடுக்கும் நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.