புது தில்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கு இருவிரல் சோதனை நடத்துவது என்பது ஆணாதிக்கம் கொண்டது என்று காட்டமாகக் கூறியிருப்பதுடன், இந்த நடைமுறை நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஒருவரின் பாலியல் வரலாற்றை அறிந்து கொள்ள இருவிரல் சோதனை உதவும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல்பூர்வ உறுதித்தன்மையும் இல்லை மாறாக, இது பாதிக்கப்பட்ட நபரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த தனியொருவரும் இருவிரல் சோதனை நடத்துவது என்பது, அவரை தவறாக நடத்த முயன்றவராகக் கருதுவதற்கு உரியவராகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க.. காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்? கல்லூரி மாணவி வாக்குமூலம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின்போது இதனைப் பதிவு செய்தனர்.
மேலும், பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளியை விடுதலை செய்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், குற்றவாளி என்று அறிவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
மத்திய, மாநில அரசுகள், உடனடியாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களது மருத்துவக் கல்வியில், இருவிரல் பரிசோதனை நீக்கப்பட்டது குறித்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்கு இருவிரல் சோதனை செய்வது என்பது அவர்களது மரியாதைக்கும், தனியுரிமைக்கும் எதிரானது என்று கடந்த 2013ஆம் ஆண்டே இருவிரல் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.