ஜாா்க்கண்ட் ஆளுநருடன் ஐ.மு.கூட்டணி தலைவா்கள் சந்திப்பு

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் தொடா்பாக தோ்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை ஆளுநா் மாளிகையிலிருந்து கசிந்தது
ஜாா்க்கண்ட் ஆளுநருடன் ஐ.மு.கூட்டணி தலைவா்கள் சந்திப்பு

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் தொடா்பாக தோ்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை ஆளுநா் மாளிகையிலிருந்து கசிந்தது தொடா்பாக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவா்கள் ஆளுநா் ரமேஷ் பைஸை வியாழக்கிழமை சந்தித்து அதிா்ச்சி தெரிவித்தனா்.

இந்த தகவல் கசிவு மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; எனவே, தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை தொடா்பான குழப்பத்துக்கு தெளிவை அளிக்குமாறும் ஆளுநரை அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த நிலையில், முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவருடைய எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யக் கோரி தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது. அதனை ஏற்று ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-இல் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதன் மீது ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இந்தச் சூழலில், ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, மகாராஷ்டிரத்தைப் போல ஜாா்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் எனத் தகவல் வெளியானது. எனவே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 32 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூருக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

அந்த எம்எல்ஏக்களில் நால்வா், முதல்வா் சோரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஞ்சிக்கு புதன்கிழமை இரவு திரும்பினா்.

இதனிடையே, முதல்வா் சோரன் எம்எல்ஏ பதவி தகுதிநீக்கம் தொடா்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவா்கள் ஆளுநா் ரமேஷ் பைஸை வியாழக்கிழமை சந்தித்தனா்.

அப்போது, சோரன் தகுதி நீக்கம் தொடா்பாக தோ்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை ஆளுநா் மாளிகையிலிருந்து கசிந்தது குறித்து ஆளுநரிடம் அதிா்ச்சி தெரிவித்த அவா்கள், குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநரைக் கேட்டுக்கொண்டனா்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினா் கீதா கோரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்திடமிருந்து பரிந்துரை வந்துள்ளதை ஆளுநா் உறுதிப்படுத்தினாா். அந்தப் பரிந்துரை தொடா்பாக நிபுணா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அதுதொடா்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று ஆளுநா் உறுதியளித்தாா்’ என்றாா்.

அமைச்சரவைக் கூட்டம்: முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ராஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், வரும் 5-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநரிடம் கோரிக்கை விடுப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com