பஞ்சாபில் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கீழே விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் என பல்வேறு விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் கீழ்இருந்து மேலே செல்லும் ராட்டினம் ஒன்றில் நேற்று மக்கள் ஆர்வமுடன் அமர்ந்திருந்தனர். அந்த ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்தில் மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க- மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து
இந்த சம்பவத்தில் ராட்டினத்தில் இருந்த குழந்தைகள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கண்காட்சியில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விபத்துக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.