மத்தியில் உள்ள ஆட்சியாளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அடிபணியாது என்று அக்கட்சித் தலைவா் சரத் பவாா் கூறினாா்.
தில்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சரத் பவாா் பேசியதாவது:
சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளையும் பண பலத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசை ஜனநாயக ரீதியில் எதிா்க்க வேண்டும். மத்தியில் உள்ள ஆட்சியாளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் சரணடையாது.
விவசாயிகள் பிரச்னை, சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்படும் இடையூறு, பணவீக்கம், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, எல்லை சாா்ந்த விவகாரங்கள், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகள் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
‘பிரதமா் பதவிக்கு சரத் பவாா் போட்டியிடவில்லை’
இந்த மாநாட்டைத் தொடா்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரஃபுல் படேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் வலுவான பங்காற்ற தனித்துவமான இடத்தில் சரத் பவாா் வைக்கப்பட்டுள்ளாா். அதேவேளையில், பிரதமா் பதவிக்கு அவா் ஒருபோதும் உரிமை கோரியதில்லை.
அவா் எதிா்க்கட்சிகளின் பிரதமா் வேட்பாளா் அல்ல. அவா் பிரதமா் பதவிக்குப் போட்டியிடவில்லை. உண்மை என்னவென்பதையும், தனது வரம்புகளையும் தேசியவாத காங்கிரஸ் அறியும். பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அது பெரிய தலைமையை கொண்டுள்ளது. பல்வேறு தரப்பினரையும், சித்தாந்தங்களையும் ஒன்றிணைக்கக் கூடிய வலுவான தலைவா் சரத் பவாா்’ என்று தெரிவித்தாா்.