கேரளம்: விதிகளை மீறி கட்டப்பட்ட ரிசார்ட்டினை தகர்க்கும் பணிகள் தொடக்கம்
கேரளத்தில் வேம்பநாடு ஏரியில் உள்ள சிறியத் தீவில் கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட ரிசார்ட்டினை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
54 உயர்தர தங்கும் அறைகளுடன் கூடிய இந்த காபிகோ ரிசார்ட் வளாகம் நெடியதுருத் தீவில் அமைந்துள்ளது. இந்த உயர்தர ரிசார்ட்டினை இடிப்பதற்கான ஆணையை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
தற்போது விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள இந்த ரிசார்ட்டினை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் ஆலப்புழா மாவட்டத்தின் ஆட்சியர் கிருஷ்ண தேஜா மற்றும் துணை ஆட்சியர் சூரஜ் சாஜி ஆகியோர் மேற்பார்வையில் தொடங்கியுள்ளது. இந்த ரிசார்ட்டினை தகர்ப்பதற்கான செலவுகள் குறித்த விவரங்கள் இன்னும் 6 மாதத்தில் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட்டினை தகர்ப்பதற்கான செலவுகளை அதன் உரிமையாளர்களே ஏற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கட்டடம் தகர்க்கப்படும்போது ஏற்படும் இடிபாடுகளால் கண்டிப்பாக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 ஏக்கர் பரப்பில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள இந்த ஆடம்பர ரிசார்ட்டினை தகர்க்க அதன் உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமையன்று ( செப்டம்பர் 12) ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, ரிசார்ட்டினை தகர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.