குஜராத்திற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.
தில்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ள கேஜரிவால், வதோதராவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வதோதரா விமான நிலையம் வந்தார்.
அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மோடி மோடி என முழக்கமிட்டதை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கேஜரிவால் கேஜரிவால் என பதிலுக்கு முழக்கமிட்டதால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த கேஜரிவால், செய்தியாளர்களின் கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளிப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.