ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை இன்று (செப். 21) நீட்டித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 29ஆம் தேதி வரை 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.
எனினும் பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வருகிறது.
குறிப்பாக, ஜூன் 19 முதல் ஜூலை 5 வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவன விமானங்கள் எட்டு முறை நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி பாதி வழியில் அவசரமாகத் தரையிறக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஜபல்பூா் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானம், விமானத்துக்குள் காற்றழுத்த பிரச்னை காரணமாக மீண்டும் தில்லிக்கு திரும்பியது. அதே நாளில், 185 பயணிகளுடன் புணேயிலிருந்து தில்லி நோக்கி புறப்பட்ட இந்த நிறுவனத்தின் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட ஒருசில நிமிஷங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஜூன் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இந்த நிறுவனத்தின் இரு விமானங்களில் கதவுகள் சரியாக மூடாமல் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், 2022 கோடைக்கால போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவிகித விமானங்களை மட்டும் 8 வார காலத்துக்கு இயக்கிக்கொள்ள டிஜிசிஏ அனுமதி அளித்தது.
இந்நிலையில், தற்போது அக்டோபர் 29ஆம் தேதி வரை 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நீட்டித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.