ஸ்ரீநகர்: 2012ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் இருந்த ஒரேயொரு குழந்தைகள் மருத்துவமனை ஜிபி பந்த் மருத்துவமனைதான். இங்கு அந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் மே 18 வரை 358 குழந்தைகள் மரணமடைந்துள்ளன.
பிறந்த குழந்தைகளின் மரண விகிதம் கடுமையாக இருந்ததால், ஜம்மு - காஷ்மீருக்கு புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனை ஸ்ரீநகரில் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த மாநில முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா அறிவித்தார்.
ஸ்ரீநகரின் பெமினா பகுதியில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கை வசதிகள் மற்றும் குழந்தைகள் பிரிவில் 250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்தவமனைக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளாக, அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அதன்பிறகு, அரசின் தலைமைகள் மாறும்போது காட்சிகள் மாறியதே தவிர, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கி, நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி முறைப்படி துவக்கிவைக்கப்படுகிறது. முதல் வாரத்தில் இங்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு, உள்நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜம்மு -காஷ்மீரின் 70 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.