

தில்லியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆபத்தான நிலையில், பொதுமக்கள் யமுனை ஆற்றைக் கடக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுக்க பெய்த கனமழையால், யமுனை நதி இருகரைகளைத் தொட்டவாறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், அடுத்த இரு நாள்களில் ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் கஜுவாலா, பிகனேர், ஜோத்பூர், நாலியா ஆகிய பகுதிகளில் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், மத்திய இந்தியா, வடமேற்கு பகுதிகளில் பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தில்லியிலுள்ள யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் உடமைகளைச் சுமந்தவாறு ஆபத்தான முறையில் ஆற்று நீரை கடந்து செல்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பருவமழை தொடங்கும்போதே வெள்ளத் தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான முறையில் மாற்று இடத்திற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் புகைப்படங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.