ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்: லாலு பிரசாத்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
இதையும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை
இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்திய சோதனையில் 106 பேரும், நேற்று நடத்திய சோதனையில் 250 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததுடன் பிஎஃப்ஐ அமைப்பின் இணையதளத்தை முதல்கட்டமாக மத்திய அரசு முடக்கியது.
இதையும் படிக்க | பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு: அப்துல் சத்தார்
அதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர்களின் ஒருவரான அப்துல் சத்தார் பிஎஃப்ஐ அமைப்பைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ‘பிஎப்ஐ போல ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வெறுப்பைப் பரப்பும் அனைத்து அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும். முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்யுங்கள். மோசமான அமைப்பு அது. ஆர்எஸ்எஸ் அமைப்பு இதற்கு முன் இரண்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது. அதனை முதலில் தடை செய்தது இரும்பு மனிதர் சர்தார் படேல் என்பதை நினைவில் வைத்திருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.