ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் டி.ஒய் சந்திராசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கௌல் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க புதன்கிழமை கூடியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தில் நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் தீர்மானித்தது.
எஸ்.முரளிதர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர் ஆவார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட நீதிபதி முரளிதர், மே 2006ல் தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.
பின்னர் மார்ச் 6, 2020 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஜனவரி 4, 2021 அன்று ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா, மும்பை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிக்க செப்டம்பர் 12ஆம் தேதி தலைமை நீதிபதி லலித் தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்தது.