உக்ரைனின் புச்சா படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதுகுறித்த தீவிரமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்,
உக்ரைனின் புச்சாவில் நடந்த படுகொலை சம்பவத்தை எம்.பி.க்கள் பலரும் எடுத்துரைத்தனர். இந்த அறிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது. அங்கு நடந்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மிகவும் தீவிரமான விஷயம். சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும்.
ரஷியா-உக்ரைன் மோதலுக்கு இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தையை சரியான பதில்.
அனைத்து நாடுகளின் சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிற நாடுகள் மதிக்க வேண்டும். இந்தியா அமைதியின் பக்கத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்' என்று பேசினார்.