ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கான கட்டணத்தை 50 சதவிகிதம் குறைத்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள செளகானில் இன்று நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்து கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம் ரூ.60 கோடி பெண்களுக்கு மிச்சமாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும் 125 யூனிட் வரை மின்சாரத்தை நுகரும் பயனாளிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அவர் அறிவித்தார். இதன்மூலம் 11.5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், ரூ.250 கோடி வரை மக்களின் செலவு மிச்சமாகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மருத்துவப் படிப்பு காலி இடங்களைத் திரும்பப் பெற ஓபிஎஸ் வலியுறுத்தல்
தொடர்ந்து, ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.