திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை இரண்டு வயது குழந்தை உள்பட மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கண்ணூரில் 3 பேரும், கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒருவரும் பலியாகினர். சாவக்காட்டில் இரண்டு மீனவர்கள் மற்றும் கொல்லத்தில் ஒரு மீனவர் ஆகிய மூன்று பேரை காணவில்லை. 11 மாவட்டங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை வரை மிகக் கனமழை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை புதன்கிழமையும் தொடரும் எனவும், கனமழையையால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து வடக்கு நோக்கி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அணைகளிலும் விதி வளைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முடிவுகளை எடுப்பார்கள். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது: மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன.
மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, மலை மாவட்டமான இடுக்கியில்தான் அதிக முகாம்கள் உள்ளன என்றார்.