பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பெண்களுக்கு பாஜகவின் அற்பமான மனநிலை தெரிவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'உன்னாவ் வழக்கு - பாஜக எம்எல்ஏவைக் காப்பாற்றுவதற்கான வேலை
கத்துவா வழக்கு - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி
ஹத்ராஸ் வழக்கு - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவு
குஜராத் பில்கிஸ் பானு வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலையும் மரியாதையும்!
இதுபோன்று பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பது, பாஜகவின் அற்பமான மனநிலையை நம் நாட்டு பெண்களுக்குக் காட்டுகிறது.
பிரதமரே, இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டாமா?' என்று ஹிந்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் கா்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தினா் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதில், குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை உய்ரநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக குஜராத் அரசு கடந்த திங்கள்கிழமை(ஆக. 15) அறிவித்தது. இதற்கு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.