இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் அருகேவுள்ள சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மூன்று ஏகே47 ரக துப்பாக்கிகள், மூன்று எம்3 ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அப்பகுதியிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிகள் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை, பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட டிரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.