காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்த குலாம் நபி ஆசாத் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது முதலே அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட ஜி-23 தலைவா்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அவருடைய எம்.பி. பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, மேலும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியை குலாம் நபி ஆசாத் ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.