சிறுநீரைக் குடிக்கச் சொல்லி பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்துவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி சீமா பத்ரா, அம்மாநில பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருப்பவர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இத்தம்பதியனருக்கு உதவியாக பழங்குடிப் பெண்ணான சுனிதா(29) பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டார். பின்னர், சீமா தில்லியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சுனிதாவை அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு சில காலம் இருந்த சுனிதா மீண்டும் ராஞ்சியில் உள்ள வீட்டிற்கு வந்ததும் அவரைக் கடுமையாக சீமா கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமாவின் வீட்டை சோதனை செய்த காவலர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை மீட்டு மருத்துமனையில் அனுமதித்ததுடன் சீமா பத்ராவைக் கைது செய்தனர்.
இந்நிலையில், காவல்துறை விசாரணையில் சீமா பத்ரா சுனிதாவின் பற்களை இரும்புக் கம்பியால் உடைத்ததுடன் சூடான பாத்திரங்களைக் கொண்டு உடம்பில் சூடு வைத்துள்ளார். மேலும், நாக்கால் சிறுநீரை நக்க வைத்ததுடன் கழிவறையையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்துப் ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி, ‘இச்சம்பவம் தெரிய வந்ததும் சீமா பத்ராவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டோம். இதுபோன்ற செயல்களை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீமா கட்சியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவார்’ எனக் கூறியுள்ளார்.