குஜராத்தில் பாஜக அரசு வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கும் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 158 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.
குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இதக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி, குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்றுக்கொள்வார் என்றும் கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.