ஹிமாசலில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுகு ஹிமாசலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிமாசல் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் (டிசம்பர் 8) வெளியானது. ஹிமாசலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஹிமாசலின் முதல்வராக யார் பொறுப்பேற்பார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஹிமாசலின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க: இஷான் கிஷன் அதிரடி இரட்டை சதம்: 200*
இந்த நிலையில், ஹிமாசலில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுகு ஹிமாசலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
58 வயதான சுக்விந்தர் சிங் ஹமீர்பூர் மாவட்டத்தின் நாடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் ஹிமாசலின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். ஹிமாசலின் புதிய முதலமைச்சர் நாளை (டிசம்பர் 11) உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுக்விந்தர் சிங் ஹிமாசலின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார். ஹிமாசல் முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான இன்றையக் கூட்டம் இரண்டாவது கூட்டமாகும்.
முன்னதாக, காங்கிரஸ் சார்பில் கூட்டம் கூட்டப்பட்டு கட்சித் தலைமை ஹிமாசலின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.