பஞ்சாப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் விலகியுள்ளார்.
மத்திய முன்னாள் சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள அவர், கட்சிக்கு வெளியே இருந்து மக்கள் பணி செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், 'எனது கண்ணியத்திற்கு இசைந்து, தற்போதைய சூழ்நிலை குறித்து நன்றாக யோசித்து இந்த விஷயத்தில் முடிவு எடுத்துள்ளேன். கட்சிக்கு அப்பாற்பட்டு கட்சிக்கு வெளியே இருந்து, இந்த தேசத்தின் நோக்கத்தை என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
46 ஆண்டு காலமாக இருந்த கட்சியிலிருந்து விலகுகிறேன். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட தாராளமய ஜனநாயகம் என்ற கண்ணியமான வாக்குறுதியின் அடிப்படையில், மாற்றுத் தலைமையின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, பொதுக் காரணங்களை முன்வைத்துத் பணியைத் தொடர்கிறேன்' என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.என். சிங், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.