தில்லியில் கரோனா விதிகளை மீறியதாக ஜனவரி 2-ஆம் தேதி மட்டும் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1-ஆம் தேதி மட்டும் 99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலைநகரான தில்லியில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 1,700 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் பலவேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அதன்படி பொதுமக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கடைகளில் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
அதனைக் கடைபிடிக்காத நிறுவனம், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தில்லியில் ஜனவரி 2-ஆம் தேதி மட்டும் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
கரோனா விதிமுறைகளை மீறிய 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜனவரி 1-ஆம் தேதி ரூ.99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அன்று மட்டும் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அபராதம் வசூலிக்கப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.