பாரதிய ஜனதா கட்சியின் தெலங்கானா தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய்க்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து கரிம்நகர் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுக்கு எதிராக கரிம்நகரில் பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் மாநில தலைவர் சஞ்சய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது காவல்துறையினரை தாக்கியதாகவும், கரோனா விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்று பிற்பகல் கரிம்நகர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஆஜர்படுத்தப்பட்டார். இவரின், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தெலங்கானா காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.