தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் தொடக்கிவைத்தார்.
இன்று திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்தேன். நானே என் சாதனைகளை விஞ்சும் வகையில் தற்போது 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்துள்ளேன்.
கடந்த 2014ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வி இடங்கள் 82,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2014ஆம் ஆண்டில் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ஆனால் தற்போது அது 596 ஆக அதிகரித்துள்ளது.