குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், காஸிபூர் மலர் சந்தையிலிருந்து தில்லி காவல் துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.
வெடிகுண்டு குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தில்லி காவல் துறை வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து தேசியப் பாதுகாப்புப் படையினரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தேசியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "காஸிபூரில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை தேசியப் பாதுகாப்புப் படையின் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழு செயலிழக்கச் செய்தது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயனங்கள் குறித்து பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்."
காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா தொலைபேசி வாயிலாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "கிடைத்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.
தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவில் இதுபற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.