நாட்டில் 9 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதில், கேரளம், மேற்குவங்கம், தமிழகம், மகாராஷ்டிரம், மிசோரம், அசாம், ஆந்திரம், ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இந்த மாநிலங்கள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அதுபோல, ஆந்திரம், அருணாச்சல, அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் சராசரி பரிசோதனை குறைந்துள்ளதாகவும் மிசோரம், அருணாச்சல, அசாம் ஆகிய மாநிலங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக மேற்குறிப்பிட்ட 9 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இந்த மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கரோனா பாதிப்பைக் குறைக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிப்பு அதிகமுள்ள 115 மாவட்டங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்குமாறும் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு அச்சப்படுகிறதா?: அமைச்சர் பதில்