அரிசி, பருப்பு, தயிர் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, தயிர் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி போன்ற தானியர்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது கடந்த திங்கள் கிழமை (ஜூலை 18) முதல் அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்ப்புகள் எழுந்தன.
அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பைகளில் அடைத்த அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்டவையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருள்களுடன் சாலைகளில் அமர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.. ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தினர்.
இதேபோன்று ஜம்மு - காஷ்மீரிலும் ஜிஎஸ்டி வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.