குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்ற நிலையில் திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்று சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுள்ள திரெளபதி முர்மு வெற்றி பெறுவதற்கு தேவையான 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். மூன்றாம் சுற்று முடிவின்படி திரௌபதி முர்மு 577,777 வாக்குகள் மதிப்பு பெற்றுள்ளார். இதன்மூலம் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கட்சி வேறுபாடின்றி திரெளபதி முர்முவை ஆதரித்த அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரௌபதி முர்முவின் வெற்றி நமது ஜனநாயகத்தின் சிறந்த முன்னுதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உடன் இருந்தார்.