தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்ததையடுத்து அவரது பொறுப்புகள் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறப்படும் புகாரில் அமலாக்கத் துறை அவரை திங்கள்கிழமை கைது செய்தது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக சத்யேந்தா் ஜெயின் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அனைத்தையும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவனிப்பார் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரம், மின்சாரம், பொதுப்பணி, தொழில் உள்ளிட்ட துறைகளை சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.