ரயில்களில் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு(லக்கேஜ்) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் சமீப காலமாக சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதையும், சக பயணிகளின் சிரமத்தையும் மனதில் வைத்து, பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளை (லக்கேஜ்) எடுத்துச் செல்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பயணிகளை எச்சரித்துள்ளது.
"ரயிலில் பயணம் செய்யும் போது லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கு வரம்பு உள்ளது என்றாலும், பல பயணிகள் அதிக உடைமைகளுடன் ரயிலில் பயணிக்கின்றனர், இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே, பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளுகடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியது ரயில்வே நிர்வாகம். இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் இன்பம் பாதியாக இருக்கும்! அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள்" என்று கூறியிருந்தது.
இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு (லக்கேஜ்)கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதாவது: ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது வகுப்பில் பயணிப்பவர்கள் வெறும் 35 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், யாரேனும் ஒருவர் அதிக உடைமைகளுடன் பயணிப்பதைக் கண்டறிந்தால், பயணி மற்றும் எடுத்துச் செல்லும் கூடுதல் உடைமைகளுக்கான தனிக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும், இது பயண தூரத்திற்கு ஏற்ப மாறுபடும் என தெரிவித்துள்ளது.