ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக லக்னெள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உத்தரப் பிரதேசத்தின் இரண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் உள்பட 6 ஆர்.எஸ்.எஸ். கிளை அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஜூன் 7ஆம் தேதி தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ராஜ் முகமது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் குண்டுவெடிப்பு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னெள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.